யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் உடற்கல்வி டிப்ளோமாக் கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்கான அறிமுக நிகழ்வு நாளை புதன்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் கீழ் உடற்கல்வி விஞ்ஞானமாணி கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடந்த மாதம் 07 ஆம் திகதி நடைபெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மாதாந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டு அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இணை மருத்துவ விஞ்ஞான பீடத்தின் கீழ் விளையாட்டு விஞ்ஞான அலகு புதியதொரு துறையாக உள்வாங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகினால் நடாத்தப்பட்டு வந்த உடற்கல்வி டிப்ளோமாக் கற்கை நெறியை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உடற்கல்வி விஞ்ஞானமாணி கற்கைநெறியை ஆரம்பிப்பதற்கான அங்கீகாரத்தை அடுத்து மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்துடன் முதற்கட்டமாக உடற்கல்வியில் உயர் டிப்ளோமாக் கற்கை நெறி நாளை ஆரம்பமாகவுள்ளது.
இந்தக் கற்கைநெறிக்கான அறிமுக நிகழ்வு நாளை காலை 8.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.
நீண்டகாலமாக இடை நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கற்கைநெறிகள் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் முயற்சியின் பலனாக மீண்டும் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்